‘பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மூடப்படும்’கலெக்டர் எச்சரிக்கை


‘பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மூடப்படும்’கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Feb 2019 10:45 PM GMT (Updated: 12 Feb 2019 8:50 PM GMT)

மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாமல் இயங்கும் முதியோர் இல்லங்கள் மூடப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்,

அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் அனைத்து முதியோர் இல்லங்களையும் ஆய்வு செய்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் அனைத்து முதியோர் இல்லங்களும் பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் உரிய சான்றுகளுடன் தங்கள் முதியோர் இல்லங்களின் கருத்துருக்களை 15 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூகநல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு முதியோர் இல்லங்கள் பதிவு செய்யாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தால் அந்த இல்லங்களை உடனடியாக மூடுவதோடு இல்ல உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story