டெல்லி தீ விபத்தில் திருச்சி டாக்டர் பலி


டெல்லி தீ விபத்தில் திருச்சி டாக்டர் பலி
x
தினத்தந்தி 12 Feb 2019 11:00 PM GMT (Updated: 12 Feb 2019 9:05 PM GMT)

டெல்லி தீ விபத்தில் திருச்சியை சேர்ந்த டாக்டர் ஒருவரும் பலியானார்.

திருச்சி,

டெல்லி கரோல்பாக் பகுதியில் அமைந்துள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் ஓட்டலில் தங்கி இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். இந்த தீ விபத்தில் மொத்தம் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையின்போது தெரியவந்தது. அரவிந்த் சுகுமாறன், நந்தகுமார் என்ற அந்த 2 பேரும் திருப்பூரை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களது உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதற்கிடையில் இறந்தவர்களில் மேலும் ஒருவர் தமிழகத்தில் திருச்சியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. திருச்சி வயலூர் ரோடு பகுதியை சேர்ந்த அவரது பெயர் சங்கரநாராயணன். 55 வயதான இவர் பல் டாக்டர் ஆவார். இவர் திருச்சி காவேரி மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். டெல்லியில் நடைபெற்ற ஒரு மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்ற அவர் அர்பித் பேலஸ் ஓட்டலில் தங்கி இருந்த போது தீ விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

டாக்டர் சங்கரநாராயணன் பலியானது பற்றிய தகவல் நேற்று இரவு தான் திருச்சியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு கிடைத்தது. இந்த தகவலை கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் அவரது வீடு அமைந்துள்ள பகுதியே சோகமானது. டாக்டர் சங்கரநாராயணனின் உடலை கொண்டு வருவதற்காக அவரது குடும்பத்தினர் டெல்லிக்கு புறப்பட்டு சென்று உள்ளனர். 

Next Story