காதலி தற்கொலை, விஷம் குடித்த கல்லூரி மாணவரும் சாவு


காதலி தற்கொலை, விஷம் குடித்த கல்லூரி மாணவரும் சாவு
x
தினத்தந்தி 12 Feb 2019 10:30 PM GMT (Updated: 12 Feb 2019 9:17 PM GMT)

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்ததில் காதலி இறந்தார். இந்த நிலையில் கல்லூரி மாணவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தென்பாலை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் சுபா(வயது 19). திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் திருவண்ணாமலையில் உள்ள வேறு ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்த செஞ்சியை அடுத்த மேல்அருங்குணத்தை சேர்ந்த பிரபு(20) என்பவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு சுபாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காதலர்கள் இருவரும் கடந்த 6-ந்தேதி மேல் அருங்குணத்தில் உள்ள பிரபுவுக்கு சொந்தமான வயலில் பூச்சி மருந்து குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த பிரபுவின் உறவினர்கள் காதல் ஜோடியை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதில் சுபா சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிரபுவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து சுபாவின் தந்தை ஏழுமலை கொடுத்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபு நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

Next Story