பாரதீய ஜனதா கூட்டணியில் புதுச்சேரி தொகுதியில் எந்த கட்சி போட்டி? சாமிநாதன் எம்.எல்.ஏ. பதில்


பாரதீய ஜனதா கூட்டணியில் புதுச்சேரி தொகுதியில் எந்த கட்சி போட்டி? சாமிநாதன் எம்.எல்.ஏ. பதில்
x
தினத்தந்தி 12 Feb 2019 11:15 PM GMT (Updated: 12 Feb 2019 11:13 PM GMT)

பாரதீய ஜனதா கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் எந்த கட்சி போட்டியிடும் என்பது இன்னும் 15 நாட்களுக்குள் தெரிந்துவிடும் என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாடளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் விதமாக பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் கருத்து கேட்க கூறியுள்ளார். மக்களுக்கு தேவையானவற்றை அறிந்து அவற்றை தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும். இதற்காக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் 30 தொகுதிகளிலும் 2 நாட்கள் பொதுமக்களிடம் சீட்டு கொடுத்து கருத்து கேட்கப்பட உள்ளது.

புதுவையில் பாரதீய ஜனதா கூட்டணி போட்டியிடும். நாங்கள்தான் போட்டியிடுவோம் என்று கூற அந்தந்த கட்சிகளுக்கு உரிமை உள்ளது. அதன்படி புதுவையில் பாரதீய ஜனதா போட்டியிட கட்சி தலைமையிடம் நாங்கள் வலியுறுத்துவோம்.

கூட்டணி இறுதியானபின் கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்பதை எங்கள் தேசிய தலைமை அறிவிக்கும். அதன் முடிவின்படி நாங்கள் செயல்படுவோம். இன்னும் 15 நாட்களில் அதற்கான முடிவு எட்டப்பட்டுவிடும் என்று நம்புகிறோம்.

பிரதமர் மோடியின் திட்டங்களினால் புதுச்சேரியில் 4 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். அவர்களுக்கு தனித்தனியே பிரதமர் கையெழுத்திட்டு கடிதம் எழுத உள்ளார்.

காமராஜரை நாட்டு மக்கள் காங்கிரஸ் தலைவராக பார்க்கவில்லை. ஊழலற்ற ஆட்சி தந்தவராகவே பார்க்கின்றனர். தலைவர்களின் நல்ல வி‌ஷயங்களை நாம் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில்தான் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவருவோம் என்று பிரதமர் மோடி பேசினார். அந்த காமராஜர் ஆட்சியை புதுச்சேரியிலும் கொண்டு வருவோம்.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

பேட்டியின்போது பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story