கொடைரோடு அருகே, பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி


கொடைரோடு அருகே, பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 13 Feb 2019 10:45 PM GMT (Updated: 13 Feb 2019 5:55 PM GMT)

கொடைரோடு அருகே பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பாலம் கட்டும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கொடைரோடு, 

கொடைரோடு அருகே உள்ள சக்கையநாயக்கனூரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் கவியரசு (வயது 18). இவர் பழனியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இவர், சக்கையநாயக்கனூரில் இருந்து பெருமாள் கோவில்பட்டிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மதுரை-செம்பட்டி சாலையில் காமலாபுரம் அருகே சென்றபோது, புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த கவியரசு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே விபத்து நடந்த இடத்தில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெறுவது குறித்து எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி கவியரசு இறந்தார் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதை கண்டித்து நேற்று அப்பகுதி மக்கள் பாலம் கட்டும் இடத்தில் திரண்டனர்.

பின்னர் அங்கு பாலம் கட்டும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். மேலும் அந்த இடத்தில் வேகத்தடை உடனடியாக அமைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story