புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு, காளைகள் முட்டியதில் 25 பேர் காயம்


புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு, காளைகள் முட்டியதில் 25 பேர் காயம்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:45 PM GMT (Updated: 13 Feb 2019 6:50 PM GMT)

புகையிலைப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தனர்.

கோபால்பட்டி,

திண்டுக்கல்லை அடுத்த புகையிலைப்பட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதையடுத்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. திண்டுக்கல், மதுரை, அலங்காநல்லூர், நத்தம், கொசவபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 453 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க 386 பேர் பதிவு செய்திருந்தனர். சுழற்சி முறையில் அவர்கள் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர்.

களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். இருப்பினும் சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் துள்ளிக்குதித்தன. எனினும் சளைக்காமல் காளைகளை அடக்க வீரர்கள் போட்டி போட்டனர். ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் வீரர்கள் உள்பட 25 பேர் காயமடைந்தனர். கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி தலைமையிலான மருத்துவக்குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த குடைப்பாறைப்பட்டியை சேர்ந்த லோகநாதன் (வயது 22), முத்தழகுபட்டியை சேர்ந்த மணிகண்டபிரபு (26), பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தரராஜ் (22) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க போலீஸ் துணை சூப்பிரண்டு ஜஸ்டின் பிரபாகர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை புகையிலைப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர். இந்த ஜல்லிக்கட்டினை திண்டுக்கல் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கண்டு களித்தனர்.

Next Story