மன்னார்குடியில் குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்தது புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி


மன்னார்குடியில் குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்தது புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 13 Feb 2019 10:00 PM GMT (Updated: 13 Feb 2019 6:59 PM GMT)

மன்னார்குடியில் குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி டெப்போ சாலை பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு மன்னார்குடி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் குப்பை கிடங்கை சுற்றி உள்ள பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி பணியாளர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

மன்னார்குடி குப்பை கிடங்கு அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது. இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால் வாந்தி-மயக்கம் ஏற்படுகிறது. சுவாச கோளாறு ஏற்படுகிறது. குப்பை கிடங்கில் இருந்து அருகில் உள்ள கூரை வீடுகளுக்கு தீ பரவி விடுமோ, என்ற அச்சமும் நிலவி வருகிறது. குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்து விட்டோம்.

சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டோம். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

Next Story