ஓசூர் அருகே நிறுத்தப்பட்டுள்ள பெருமாள் சிலையை கொண்டு செல்ல தற்காலிக பாதை அமைப்பு


ஓசூர் அருகே நிறுத்தப்பட்டுள்ள பெருமாள் சிலையை கொண்டு செல்ல தற்காலிக பாதை அமைப்பு
x
தினத்தந்தி 13 Feb 2019 10:15 PM GMT (Updated: 13 Feb 2019 7:02 PM GMT)

ஓசூர் அருகே நிறுத்தப்பட்டுள்ள பெருமாள் சிலையை கொண்டு செல்ல தற்காலிக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஓசூர், 

கர்நாடக மாநிலம் தெற்கு ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் எடையில் பாறை வெட்டி எடுக்கப்பட்டது.

இதில் முகம் மற்றும் 2 கைகள் மட்டும் வடிவமைத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி 240 டயர்கள் கொண்ட பெரிய லாரியில் பிரமாண்ட சிலை புறப்பட்டது. இந்த லாரி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது. பின்னர் போச்சம்பள்ளி, மத்தூர், கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் அருகே உள்ள சாமல்பள்ளம் என்ற இடத்திற்கு வந்தது.

ஆனால் அங்குள்ள பாலத்தில் 350 டன் எடையுள்ள பெருமாள் சிலை மற்றும் லாரியின் எடை 50 டன் என மொத்தம் சுமார் 400 டன் எடை கொண்ட லாரி பாலத்தை கடந்தால் அது உடைந்துவிடும் என்பதால், அந்த பாலத்தில் லாரி கடந்து செல்ல தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் லாரி அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மாற்றுப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பாலத்தின் அருகே ஆற்றில் புதிதாக தற்காலிக பாதை அமைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இந்த பணி நேற்று நிறைவடைந்த நிலையில், அதன் உறுதி தன்மையை சோதனை செய்த பின் பெருமாள் சிலை ஏற்றப்பட்ட லாரி அந்த சாலை வழியாக செல்லும் என சிலை அமைப்பு குழுவினர் தெரிவித்தனர்.

Next Story