புழல் அருகே, குடும்பத் தகராறில் மனைவி தீக்குளிப்பு; காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம்


புழல் அருகே, குடும்பத் தகராறில் மனைவி தீக்குளிப்பு; காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:30 PM GMT (Updated: 13 Feb 2019 7:45 PM GMT)

புழல் அருகே குடும்பத் தகராறில் மனைவி தீக்குளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம் அடைந்தார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் வள்ளுவன் நகரைச் சேர்ந்தவர் இளையராஜா(வயது 36). வெல்டர். இவருடைய மனைவி சாமுண்டீஸ்வரி(30). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இளையராஜாவுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அவர், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவன்–மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று காலை வழக்கம்போல் இளையராஜா குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த சாமுண்டீஸ்வரி, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜா, மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் தீப்பிடித்துக்கொண்டது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு கணவன்–மனைவி இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி புழல் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story