திருவள்ளூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு; மறியல்


திருவள்ளூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு; மறியல்
x
தினத்தந்தி 13 Feb 2019 11:15 PM GMT (Updated: 13 Feb 2019 7:45 PM GMT)

திருவள்ளூரில் வக்கீல்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பு மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 48). வக்கீலான இவர் கடந்த 11–ந்தேதி தனது நண்பரான வக்கீல் சங்கர் என்பவரை அழைத்துக்கொண்டு திருவள்ளூரில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றார். திருவள்ளூர் ராஜாஜி சாலையில் சென்றபோது கார் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதைப்பார்த்த குணசேகரன் வழிவிடுமாறு கேட்டுள்ளார். அப்போது அந்த காரில் இருந்த 7 பேர் வழிவிடாமல் குணசேகரனையும், சங்கரையும் தகாத வார்த்தையால் பேசி தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்று விட்டனர். இதுகுறித்து குணசேகரன் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு சக வக்கீல்கள் ஒன்று கூடி கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 7 பேரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திருவள்ளூர்–திருப்பதி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் நீண்ட தொலைவிற்கு அணி வகுத்து நின்றன. அப்போது அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட வக்கீல்களிடம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த வழியாக சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story