கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடலில் சீற்றம் ஏற்பட்டதால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபம் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்ப்பதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னையில் வங்ககடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குமரி கடல் பகுதி சீற்றத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து நாள் முழுவதும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை உள்ளிட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்களும் மீன் பிடிக்க செல்லவில்லை.
நேற்று 2-வது நாளாக காலையில் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியதுடன் ராட்சத அலைகளும் எழுந்து கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும், கடல் சீற்றம் காரணமாக ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவைநகர், கோவளம், மணக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும், கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்று நிறுத்தினார்கள்.
சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கஜா புயல் எதிரொலி காரணமாக வேதாரண்யத்தில் 2 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் அப்பகுதியில் செய்யப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு மேற்கொண்டார்.