நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2019 9:30 PM GMT (Updated: 13 Feb 2019 9:15 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.

அரக்கோணம், 

அரக்கோணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை பொது செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோபால், நகர தலைவர் ஸ்டீபன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கஜேந்திரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் தி.வேல்முருகன் கலந்துகொண்டு பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் சசிக்குமார் நன்றி கூறினார்.

பின்னர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக முருகன், நளினி ஆகியோர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களின் உயிர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு மத்திய அரசும், தமிழக கவர்னரும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு அமைச்சரவை கூட்டத்தை கூட்டி மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தல் மக்களுக்கான தேர்தல் கிடையாது, நோட்டுகளுக்கான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கட்சியுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணி வைக்காது. கூட்டணி குறித்து மார்ச் மாதம் கட்சி பொதுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story