நிதி பற்றாக்குறையால் 7ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை அமைச்சர் கந்தசாமி பேச்சு


நிதி பற்றாக்குறையால் 7ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை அமைச்சர் கந்தசாமி பேச்சு
x
தினத்தந்தி 13 Feb 2019 10:45 PM GMT (Updated: 13 Feb 2019 9:57 PM GMT)

நிதி பற்றாக்குறையால் 7 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சமூக நலவாரியம் மற்றும் ஜிப்மர் மனநல மருத்துவத்துறை சார்பில் போதைப் பொருள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு பயிலரங்கம் திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு சமூக நலவாரிய தலைவி வைஜெயந்தி தலைமை தாங்கினார்.

சமூக நலத்துறை செயலாளர் ஆலிஸ் வாஸ் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு பயிலரங்கத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கிராமப்புறங்களில் போதை பழக்கம் அதிகமாக உள்ளது. குடும்பத்தையும், தொழிலையும் மறந்து தொடர்ந்து மதுகுடிப்பவர்கள் இருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து 10, 15 நாட்கள் மது குடித்து வருகின்றனர். அதன் பின்னர் ஒருவாரம் வேலைக்கு செல்கின்றனர். பின்னர் மீண்டும் குடிக்கின்றனர். இதனால் பிள்ளைகள் படிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இது போன்று நகரப்பகுதிகளிலும் போதை பழக்கம் உள்ளது.

போதை தொடர்பான விழிப்புணர்வை நகரம் மட்டுமல்லாது, கிராமப்புறங்களிலும் ஏற்படுத்த வேண்டும். மதுகுடிப்பதற்கு முன் நல்லவர்களாக இருப்பவர்கள் மதுகுடித்த பின்னர் என்ன செய்கின்றோம் என்பது தெரியாமலேயே பல தவறுகளை செய்கின்றனர். புதுச்சேரியில் கலால்துறை தேவை தானா? ஒருபுறம் விழிப்புணர்வும், மறுபுறம் மதுக்கடையை திறந்து மது விற்பனையும் செய்யலாமா? என்று பலர் நினைக்கின்றனர்.

அரசு மதுபானக்கடைகளை திறக்காவிட்டால், நிறைய பேர் திருட்டு தனமாக தயாரிக்கப்படும் மதுவை குடிப்பார்கள். இதனால் அவர்களின் உடல்நிலை கெடும். புதுச்சேரியில் சுற்றுலா வளர்ந்துள்ளது. வார இறுதி நாட்களில் இங்கு வரும் இளைஞர்கள் தெருக்களில் குடிப்பது குளிர்பானமா? மதுவா? என்பது தெரியாததுபோல் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரத்தை தடுக்க முடியாது, வியாபாரத்தை தடுத்தால் அரசுக்கு நிதி குறையும். எனவே மதுக்கடைகள் திறந்து வைத்திருக்கும் நேரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

புதுச்சேரியில் நிறைய தனியார் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து வேலைவாய்ப்பு கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது புதுவையில் 7 ஆயிரம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனை நிரப்பினால், படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். நிதி தட்டுப்பாடு இருப்பதால் கோப்புகள் கவர்னர் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று திரும்பி வருகின்றது. மாணவர்கள் மத்திய அரசின் பணியிடங்களுக்கு தேர்வாகும் வகையில் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சமூக நலவாரிய அதிகாரிகள், ஊழியர்கள், ஜிப்மர் மனநல மருத்துவர்கள், குடும்ப நல ஆலோசகர்கள், நிர்வாகிகள் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு சம்பந்தமான துறைகளில் பணியாற்றுவோர் கலந்து கொண்டனர்.


Next Story