விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதால் தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க. தோல்வி அடையும் முத்தரசன் பேட்டி


விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதால் தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க. தோல்வி அடையும் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2019 9:00 PM GMT (Updated: 13 Feb 2019 10:19 PM GMT)

விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க. தோல்வி அடையும் என்று சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

சேலம், 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க 26-வது மாநில மாநாடு கடந்த 11-ந்தேதி தொடங்கியது. நேற்று மாநாட்டு நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் மாசிலாமணி, இந்திரஜித், துளசிமணி, பெரும்படையார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் இரவு நடந்தது. இதில் பங்கேற்க வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-மத்தியில் பிரதமர் மோடி அரசும், மாநிலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் தொடர்ந்து விவசாயிகள் விரோத கொள்கைகளை பின்பற்றி வருகிறது. இதனால் இந்த 2 கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

110-விதியின் கீழ் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது போல் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் நாடாளுமன்ற தேர்தலுக்காக நடத்துகிற நாடகம். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் இதுபோன்ற சலுகைகளை வழங்கி வருகிறார்கள். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் படுதோல்வி அடையும். இந்த 2 கட்சிகளுக்கு எதிராக விவசாயிகள் வாக்களிக்க வேண்டும். அதேசமயம் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெறும்.

இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Next Story