பழனி முருகன் கோவிலில் 16 நாட்களில் உண்டியல் வருவாய் ரூ.1 கோடியே 87 லட்சம்


பழனி முருகன் கோவிலில் 16 நாட்களில் உண்டியல் வருவாய் ரூ.1 கோடியே 87 லட்சம்
x
தினத்தந்தி 14 Feb 2019 10:00 PM GMT (Updated: 14 Feb 2019 9:39 PM GMT)

பழனி முருகன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், 16 நாட்களில் ரூ.1 கோடியே 87 லட்சம் வருவாய் கிடைத்தது.

பழனி,

பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 28, 29 ஆகிய 2 நாட்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 16 நாட்களுக்கு பின் நேற்று பழனி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதற்கு கோவில் இணை ஆணையர் செல்வராஜ், மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், பழனி கோவில் துணை ஆணையர் செந்தில்குமார், அறநிலையத்துறை ஆய்வாளர் கணேஷ், முதுநிலை கணக்கு அதிகாரி மாணிக்கவேல், மேலாளர் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் உண்டியல் மூலம் ரூ.1 கோடியே 86 லட்சத்து 65 ஆயிரத்து 130-ம், தங்கம் 671 கிராம், வெள்ளி 6 கிலோ 920 கிராம், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, கத்தார், சவுதிஅரேபியா போன்ற வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1486-ம் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.

மேலும் தங்கத்தால் ஆன வேல், சங்கிலி, மோதிரங்கள், வெள்ளி வேல், வெள்ளிப்பாதம், வெள்ளி கைவிலங்கு மற்றும் நவதானியங்கள், பாத்திரங்கள், வெள்ளி குத்து விளக்குகள், கெடிகாரம், பட்டு வேட்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பல்வேறு வங்கி அலுவலர்கள், ஊழியர் கள், பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், நாதஸ்வர, தவில் கல்லூரி மாணவர்கள், கோவில் அலுவலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

Next Story