திருவண்ணாமலையில் 2 பெண்களிடம் நகை பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


திருவண்ணாமலையில் 2 பெண்களிடம் நகை பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Feb 2019 10:45 PM GMT (Updated: 15 Feb 2019 5:36 PM GMT)

திருவண்ணாமலையில் வெவ்வேறு பகுதிகளில் 2 பெண்களிடம் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை வேங்கிக்கால் இடுக்கு பிள்ளையார் கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மனைவி கண்ணகி (வயது 44). இவர் சம்பவத்தன்று மொபட்டில் திருவண்ணாமலைக்கு சென்றார்.

பின்னர் அவர் வீடு திரும்பும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இடுக்கு பிள்ளையார் கோவில் முதல் தெரு அருகில் வைத்து வழிமடக்கி மிரட்டி 2 பவுன் சங்கிலி, 2 பவுன் நெக்லஸ் ஆகியவற்றை பறித்தனர். அப்போது அவர் கூச்சலிட்டு உள்ளார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து கண்ணகி கொடுத்த புகாரின்பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் திருவண்ணாமலை தாலுகா இனாம்காரியந்தல் கிராமம் தீபம் நகரை சேர்ந்தவர் தனஞ்செயன். இவரது மனைவி காவேரி (42). இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் காவேரியை மடக்கி அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து காவேரி கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story