விக்கிரவாண்டி அருகே, டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதல்- டிரைவர் பலி


விக்கிரவாண்டி அருகே, டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதல்- டிரைவர் பலி
x
தினத்தந்தி 15 Feb 2019 10:30 PM GMT (Updated: 15 Feb 2019 6:03 PM GMT)

விக்கிரவாண்டி அருகே டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பஸ் டிரைவர் பலியானார். 30 பயணிகள் காயமடைந்தனர்.

விக்கிரவாண்டி, 

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு சேலத்திற்கு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை சென்னை வியாசர்பாடியை சேர்ந்த அறிவழகன் (வயது 32) என்பவர் ஓட்டினார்.

இந்த பஸ் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை என்ற இடத்தில் வந்தபோது முன்னால் டீசல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறத்தில் ஆம்னி பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்புறம் அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் அறிவழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பஸ் பயணிகளான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த நாகம்மாள் (40), ஊரப்பாக்கம் செண்பகவள்ளி (38), அடையார் இளையராஜா மனைவி சத்யா (29), அவரது மகள் அக்‌ஷயா (3), மகேஸ்வரி (55), ஆத்தூர் ஆரிபா (25), பள்ளிக்கரணை சின்னத்தம்பி (60), சிங்கபெருமாள்கோவில் பிரபாகரன் (25), கள்ளக்குறிச்சி ஜெயமுருகன் (42), புதுக்கோட்டை கார்த்திகேயன் (30) உள்பட 30 பேர் காயமடைந்தனர்.

உடனே இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story