திருச்செந்தூரில் மாசித் திருவிழா: சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரில் வீதி உலா


திருச்செந்தூரில் மாசித் திருவிழா: சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரில் வீதி உலா
x
தினத்தந்தி 15 Feb 2019 9:45 PM GMT (Updated: 15 Feb 2019 7:10 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், தெய்வானை அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், தெய்வானை அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மாசித் திருவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 6-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலையில் கீழ ரத வீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் எழுந்தருளினர். அங்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் மேலக் கோவிலை சேர்ந்தனர்.

சுவாமி-அம்பாள் வீதி உலா

இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், தெய்வானை அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாசித் திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், புஷ்ப காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி, சூரிய காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

இன்று, சிவப்பு சாத்தி

மாசித் திருவிழாவின் 7-ம் நாளான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 4.30 மணிக்கு சண்முக பெருமான் உருகு சட்டசேவை நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

காலை 8.45 மணிக்கு சுவாமி வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சென்றடைகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

8-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், காலை 11.30 மணிக்கு சுவாமி பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

19-ந்தேதி, தேரோட்டம்

9-ம் நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது. 10-ம் நாளான 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 11-ம் நாளான 20-ந்தேதி (புதன்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. 12-ம் நாளான 21-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு கோலத்துடன் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

விழா நாட்களில் கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Next Story