பண்ருட்டி அருகே, கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்


பண்ருட்டி அருகே, கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்
x
தினத்தந்தி 15 Feb 2019 10:45 PM GMT (Updated: 15 Feb 2019 8:45 PM GMT)

பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுப்பேட்டை,

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள அக்கடவல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். விவசாயி. இவர் தனது நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். கரும்பு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ராமகிருஷ்ணன் நேற்று காலையில் சென்றார். அப்போது கரும்பு தோட்டத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது ஒருவர் மர்மமான முறையில் இறந்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர், விழுப்புரம் மாவட்டம் பில்லூரை சேர்ந்த தொழிலாளி வீரப்பன்(வயது 62) என்பது தெரியவந்தது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அவர், இங்கு வந்தது எப்படி?, அவரை யாரேனும் அடித்து கொலை செய்து விட்டு கரும்பு தோட்டத்திற்குள் வீசி சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story