கவர்னரை கண்டித்து 3-வது நாளாக விடிய, விடிய தர்ணா; ஆர்ப்பாட்டம், சிறை நிரப்புதல், உண்ணாவிரதம் என புதுவையில் அடுத்தடுத்து போராட்டங்கள் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு


கவர்னரை கண்டித்து 3-வது நாளாக விடிய, விடிய தர்ணா; ஆர்ப்பாட்டம், சிறை நிரப்புதல், உண்ணாவிரதம் என புதுவையில் அடுத்தடுத்து போராட்டங்கள் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 15 Feb 2019 11:45 PM GMT (Updated: 15 Feb 2019 11:28 PM GMT)

கவர்னர் கிரண்பெடியை கண்டித்து நேற்று 3-வது நாளாக விடிய, விடிய தர்ணா நடந்தது. தொடர்ந்து ஆர்ப்பாட்டம், சிறை நிரப்புதல், உண்ணாவிரதம் என புதுவையில் அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்துவது என முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி,

கவர்னர் கிரண்பெடியை கண்டித்து புதுவையில் போராட்டம் நடந்து வருகிறது.

புதுச்சேரி முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகள், மதசார்ப்பற்ற கட்சியை சேர்ந்த தலைவர், முக்கிய நிர்வாகிகள் கவர்னர் மாளிகை முன்பு 39 மக்கள் பிரச்சினை கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 3 நாட்களாக விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் மாளிகை முன்பு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று இரவு 7 மணியளவில் ஆலோசனை நடத்தினார். அப்போது கவர்னர் கிரண்பெடிக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து போராட்டம் நடந்து வரும் இடத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் கிரண்பெடி மக்கள் நலத்திட்டங்களை முடக்கி வருகிறார். பொதுத்துறை, கூட்டுறவு நிறுவனங்கள், மில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புகிறார். இலவச அரிசி திட்டத்தை நடைமுறைப்படுத்த தடைபோடு கிறார். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான மானியங்களை தடுக்கிறார்.

இதுபோன்ற 39 கோரிக்கைகளை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி கடந்த 7-ந் தேதி கவர்னருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன். அந்த கடிதத்திற்கு பதில் வரவில்லை. இதனால் கடந்த 13-ந் தேதியில் இருந்து கவர்னர் மாளிகை முன்பு அறவழியில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த போராட்டத்திற்கு மதசார்ப்பற்ற அணிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் 14-ந் தேதி காலை கவர்னர் கிரண்பெடி டெல்லிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். புதுவை பல்கலைக்கழகத்தில் இன்று (நேற்று) பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலைக்கழக முதன்மை காப்பாளரான கவர்னர் அந்த விழாவை புறக்கணித்து விட்டு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லிக்கு சென்றுவிட்டார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், மாநில மக்களுக்கும் கவர்னர் கிரண்பெடி மரியாதை கொடுக்க தவறிவிட்டார். மாநிலத்தின் மக்கள் பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தர்ணா போராட்டம் நடத்தும் போது அதுகுறித்து பரிசீலிக்காமல் உதாசீனப்படுத்திவிட்டு கவர்னர் கிரண்பெடி சென்றுவிட்டார். ஆனால் தொடர்ந்து நாங்கள் 3 நாட்களாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறோம்.

இந்தநிலையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் எங்களின் 39 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணிக்கட்சி தலைவர்கள் ஆகியோர் கவர்னர் மாளிகை முன்பு தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டணி கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் அருகில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள். கன்னியக்கோவில், திருக்கனூர், மதகடிப்பட்டு, அரியாங்குப்பம், வில்லியனூர், பெரிய காலாப்பட்டு, கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரி, லாஸ்பேட்டை, புதுவை புதிய பஸ் நிலையம், முத்தியால்பேட்டை அஜந்தா சிக்னல், முதலியார்பேட்டை, சாரம் ஆகிய 12 இடங்களில் நாளை (இன்று) மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளான தி.மு.க. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள். இதற்காக ஒவ்வொரு கட்சியிலும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடக்கிறது. அப்போது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்படும். கவர்னரை திரும்பப் பெற வலியுறுத்தி 18-ந் தேதி புதுவை தலைமை தபால் நிலையத்தில் இருந்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரிகளுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்த உள்ளோம்.

19-ந் தேதி மாசி மகம் திருவிழா என்பதால் அன்றைய தினம் போராட்டம் எதுவும் கிடையாது. 20-ந் தேதி தொகுதி வாரியாக கன்னியக்கோவில், திருக்கனூர், மதகடிப்பட்டு, அரியாங்குப்பம், வில்லியனூர், பெரிய காலாப்பட்டு, கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரி, லாஸ்பேட்டை, புதுவை புதிய பஸ் நிலையம், முத்தியால்பேட்டை அஜந்தா சிக்னல், முதலியார்பேட்டை, சாரம் ஆகிய 12 இடங்களில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்கள், வங்கிகள், தபால் நிலையம் முன்பாக சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். 21-ந் தேதி தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு நமக்கு எதிரானது. நமது தர்ணா போராட்டம் அமைதியான முறையில் நடக்க வேண்டும். எனவே கவர்னர் மாளிகைக்கு வருவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். நாம் நடத்தும் போராட்டம் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகளையும் விளைவிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story