நாகையில், சாலையோர கடையில் பார்சல் வாங்கிய இட்லியில் இறந்த பல்லி கிடந்ததால் பரபரப்பு


நாகையில், சாலையோர கடையில் பார்சல் வாங்கிய இட்லியில் இறந்த பல்லி கிடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Feb 2019 11:00 PM GMT (Updated: 16 Feb 2019 5:26 PM GMT)

நாகையில் சாலையோர கடையில் பார்சல் வாங்கிய இட்லியில் இறந்த பல்லி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை அரசு மருத்துவமனை அருகே சாலையோரம் உள்ள ஒரு கடையில் ஒருவர் இட்லி பார்சல் வாங்கி உள்ளார். அப்போது அந்த இட்லியில் இறந்த பல்லி கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், இதுகுறித்து நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்பழகன், ராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கடையில் ஆய்வு செய்தனர். இதில் இட்லியில் பல்லி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த கடையில் இருந்து சட்னி, சாம்பார் ஆகியவை குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டது. இதையடுத்து உணவக உரிமையாளரிடம் சுகாதாரமாக உணவு விற்பனை செய்ய வேண்டும் என்று அலுவலர்கள் அறிவுறுத்தினர்.


பின்னர் நீலா கீழ வீதி, தெற்கு, மேல வீதி, பப்ளிக் சாலையில் செயல்படும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இதில் 10 ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட 8 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளரிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்று அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். சாலையோர கடையில் பார்சல் வாங்கிய இட்லியில் இறந்த பல்லி கிடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story