வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் கணக்கெடுக்கும் பணி குறித்த ஆய்வு கூட்டம்


வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் கணக்கெடுக்கும் பணி குறித்த ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2019 10:45 PM GMT (Updated: 16 Feb 2019 7:18 PM GMT)

வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் கணக்கெடுக்கும் பணி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கலந்து கொண்டார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுக்கும் பணி மற்றும் இணையதளத்தில் பதிவேற்றும் பணி தொடர்பாக மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனருமான முனியநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் கணக்கெடுக்கும் பணி மற்றும் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்கனவே வறுமை கோட்டிற்கு கீழ் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள், அவர்தம் குடும்ப விவரங்கள், வங்கி கணக்கு தொடர்பான விவரங்கள் சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது புதிதாக பட்டியலில் சேர்க்க தகுதியானவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியினை விரைந்து முடிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆகியோருக்கு தேவையான அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, நாகை, வேதாரண்யம், திருமருகல் மற்றும் திட்டச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் குறித்த கண்கெடுக்கும் பணி மற்றும் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ளும் பணியினை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி முனியநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வைதேகி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story