தேவர்சோலையில் துப்பாக்கி தோட்டாக்களுடன் 5 பேர் கைது

தேவர்சோலையில் துப்பாக்கி தோட்டாக்களுடன் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா தேவர்சோலை போலீஸ் நிலையம் முன்பு சப்–இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி நோக்கி சென்ற கேரள பதிவு எண் கொண்ட ஒரு காரை நிறுத்தினர். பின்னர் காரில் இருந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது ஒருவரது சட்டை பையில் 3 துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே உள்ள கருவாரகுன்டு கிராமத்தை சேர்ந்த அப்துல் சலீம் மகன் சாகுல் அமீது(வயது 24), போக்கர் மகன் யூசுப்(36), அம்சா மகன் ரெனிஷ்(32), அய்துரு மகன் மொய்தீன் என்ற பைசல்(34), ரஷீது மகன் கயிஸ் சனூப்(22) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் நாங்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் என்றும், கூடலூர் வழியாக சுல்தான்பத்தேரிக்கு காரில் செல்லும்போது சாலையில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்தது என்றும், அதை எடுத்துக்கொண்டு செல்லும்போது சிக்கிவிட்டோம் என்றும் போலீசில் கூறியுள்ளனர். பின்னர் தேவர்சோலை போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.