தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்


தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
x
தினத்தந்தி 16 Feb 2019 10:00 PM GMT (Updated: 16 Feb 2019 10:10 PM GMT)

தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் மாசி மக கடல் தீர்த்தவாரி உற்சவம் தொடங்கியது.

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே தீவனூரில் ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 9-ம் ஆண்டு மாசி மக கடல் உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு லட்சுமி நாராயண பெருமாளுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள் திண்டிவனம், கிளியனூர், இரும்பை வழியாக ஊர்வலமாக பட்டானூர் ஜகன்நாத் கோவிலை சென்றடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்பு திருமஞ்சனமும், வருகிற 21-ந்தேதி காலை 10 மணிக்கு புதுச்சேரி தியாகராஜா வீதியில் உள்ள சரஸ்வதி விலாச சபாவில் தீபாராதனையும், மாலை 7 மணிக்கு லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாணம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து 23-ந் தேதி காலை 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோரிமேடு, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, சேதாரப்பட்டு, வானூர், மயிலம், திண்டிவனம் வழியாக மீண்டும் தீவனூர் கோவிலுக்கு 24-ந்தேதி வந்தடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் நாமக்காரர் முனுசாமி கவுண்டர் செய்து வருகிறார்.

Next Story