மலையடிபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வீரர்களை புரட்டி எடுத்த காளைகள் 13 பேர் காயம்


மலையடிபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வீரர்களை புரட்டி எடுத்த காளைகள் 13 பேர் காயம்
x
தினத்தந்தி 17 Feb 2019 11:00 PM GMT (Updated: 17 Feb 2019 6:22 PM GMT)

மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வீரர்களை காளைகள் புரட்டி எடுத்தன. இதில் மாடுகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிபட்டியில் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பின்னர் பங்குத்தந்தை சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் கையில் கரும்பை எடுத்துக் கொண்டும், பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தும் வாடிவாசலுக்கு வந்தனர்.

அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடங்கியது. மணப்பாறை தாசில்தார் சித்ரா கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். இதில், 619 காளைகளும், 340 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். முதலில் கோவில் காளை வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.


வாடிவாசலில் இருந்து காளைகள் ஆக்ரோ‌ஷமாக சீறிப்பாய்ந்து வெளியேறின. அந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். அதில் சில காளைகள் தன்னை அடக்க வந்த வீரர்களை தரையில் போட்டு புரட்டி எடுத்தன. சில காளைகள், வீரர்களின் பிடியில் இருந்து தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டன.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களால் அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள், கட்டில், பீரோ, டேபிள், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள், குத்து விளக்கு உள்பட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.


 காளைகள் முட்டியதில் 13 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு வாடிவாசல் அருகில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விதிமுறைகள்படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதா என்று ஸ்ரீரங்கம் துணை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கண்காணித்தனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

Next Story