ஈரோட்டில் கோடை காலத்துக்கு முன்பே கொளுத்தும் வெயில்


ஈரோட்டில் கோடை காலத்துக்கு முன்பே கொளுத்தும் வெயில்
x
தினத்தந்தி 17 Feb 2019 10:00 PM GMT (Updated: 17 Feb 2019 7:51 PM GMT)

கோடை காலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் வெயில் கொளுத்த தொடங்கி இருக்கிறது.

ஈரோடு,

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது. தினமும் அதிகபட்சமாக 95 டிகிரிவரை வெயிலின் தாக்கம் உள்ளது. நேற்று ஈரோட்டில் வெயில் கடுமையாக கொளுத்தியது. பகல் நேரத்தில் வெளியில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு வெயில் அக்னியாக இருந்தது. வீடுகளில் இருந்தவர்களும் வெப்பத்தின் தாக்கத்தை அதிகமாக உணர்ந்தார்கள். இதனால் குளிர்பானக்கடைகள், இளநீர் கடைகள் மற்றும் தர்பூசணி கடைகளில் பொதுமக்கள் அதிகம் குவிந்தனர். கரும்புச்சாறு உள்ளிட்ட இயற்கை பானங்களை குடிக்க பொதுமக்கள் ஆர்வமுடன் வந்தார்கள். நேற்று ஈரோட்டில் அதிகபட்ச வெயில் 98 டிகிரி பாரன்கீட்டாக இருந்தது. செல்சியஸ் அளவில் 36 டிகிரியாக இருந்தது.

குளிர்காலம் முடிந்து கோடை காலத்தின் வாயிலில் இருக்கும்போதே வெயிலின் அளவு 100 டிகிரியை தொடும் அளவுக்கு உயர்ந்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 82 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து சராசரியாக வினாடிக்கு 300 முதல் 400 கன அடியாக இருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு சுமார் 800 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் தண்ணீர் வேகவேகமாக குறையும். கோடை காலம் தொடங்க இன்னும் ஒரு மாதகாலம் இருக்கும் நிலையில் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் கோடை காலம் எப்படி இருக்குமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

Related Tags :
Next Story