கூலி உயர்வு வழங்கக்கோரி அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் தொழிலாளர்கள் தர்ணா


கூலி உயர்வு வழங்கக்கோரி அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் தொழிலாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 17 Feb 2019 10:30 PM GMT (Updated: 17 Feb 2019 7:51 PM GMT)

கூலி உயர்வு வழங்கக்கோரி அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதிக்கு உள்பட்ட தாளக்கரை, ஒசூர், கொங்காடி, தாமரைக்கரை ஆகிய பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் 50–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் வனப்பகுதியில் வளர்ந்து காணப்படும் ‘சீமார்’ புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு வனத்துறை சார்பில் 200 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. மேலும் வனப்பகுதியில் அறுவடை செய்யப்படும் சீமார் புல்லை வனத்துறையினரிடம் ஒப்படைத்து விடுவார்கள். இந்தநிலையில் தொழிலாளர்கள் அனைவரும் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி நேற்று காலை வனக்குழு தலைவர் பசுவண்ணா மற்றும் கண்ணுபையன் உள்பட 50–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுப்பதற்காக அந்தியூர் வனத்துறை அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது வனத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லை. இதனால் மனு கொடுக்க வந்த தொழிலாளர்கள் அனைவரும் காத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் நீண்டநேரமாகியும் வரவில்லை. இதைத்தொடர்ந்து காலை 11 மணி அளவில் தொழிலாளர்கள் அனைவரும் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தொழிலாளர்கள் கூறுகையில், ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் தான் வனப்பகுதியில் சீமார் புல் வளர்ந்து காணப்படும். இந்த சீமார் புல் வனத்துறை அதிகாரிகளின் அனுமதியோடு அறுவடை செய்யப்படுகிறது. மேலும் இந்த சீமார் புல் வனத்துறை அலுவலகத்திலேயே கொடுக்கப்படுகிறது.

இதற்காக வனத்துறை சார்பில் எங்களுக்கு ரூ.200 மட்டுமே கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் அறுவடை செய்யப்படும் சீமார் புல்லுக்கு சத்தியமங்கலம் வனத்துறை சார்பில் ரூ.350 கூலியாக அந்த பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் எங்களுக்கும் ரூ.350 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர். அதற்கு வனத்துறையினர், மாவட்ட கலெக்டர் மற்றும் வன அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் மதியம் 1 மணி அளவில் தங்களுடைய தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story