காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை சஞ்சய் நிருபம் உறுதி


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை சஞ்சய் நிருபம் உறுதி
x
தினத்தந்தி 17 Feb 2019 11:45 PM GMT (Updated: 17 Feb 2019 10:20 PM GMT)

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் உறுதி அளித்தார்.

தானே, 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் உறுதி அளித்தார்.

6 லட்சம் விண்ணப்பங்கள்

பா.ஜனதா கட்சி ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என உறுதி அளித்தது. ஆனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தநிலையில் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துத்துள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக எங்கள் கட்சி சார்பில் ஏற்கனவே கிட்டத்தட்ட 6 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இளைஞர் காங்கிரஸ் அணியினர் மும்பையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று அனைத்து இளைஞர்களையும் இந்த விண்ணப்பத்தை கொடுத்து பூர்த்தி செய்வதை உறுதி செய்வார்கள்.

இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவர்களுக்கு உதவித்தொகைக்கான அட்டை வழங்கப்படும்.

உதவித்தொகை

எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் உதவித்தொகைக்கான அட்டை வைத்துள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் அல்லது வேலையின்றி தவிக்கும் அந்த இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

18 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பின்மைக்கான உதவித்தொகை பெற தகுதி உள்ளவர்கள் ஆவர்.

காங்கிரஸ் அரசு புதிதாக பதவியேற்றுள்ள ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேஷ் பகுதிகளில் ஏற்கனவே வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.4 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story