பொன்னேரி அருகே 6 வழிச்சாலைக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும் தி.மு.க. கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்


பொன்னேரி அருகே 6 வழிச்சாலைக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும் தி.மு.க. கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:15 PM GMT (Updated: 18 Feb 2019 7:23 PM GMT)

பொன்னேரி அருகே 6 வழிச்சாலைக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3,200 கோடி செலவில் 136 கி.மீ. தூரத்துக்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சாலை கண்ணிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், தும்பாக்கம், தொளவேடு, காக்கவாக்கம், பருத்திமேனிகுப்பம், பாலவாக்கம், சென்னங்காரணை, ஆலப்பாக்கம், ஈன்றம்பாளையம், பேரண்டூர், பனப்பாக்கம், மாம்பாக்கம், போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.

இப்பகுதி விவசாயிகள் 3 போக சாகுபடி செய்வர். எனவே இந்த பகுதிக்கு தமிழ்நாட்டின் இரண்டாம் நெற் களஞ்சியம் என்ற பெயர் உண்டு. இப்படி அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்க அதிகாரிகள் நிலம் அளவிடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

6 வழிச்சாலை அமைத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், நூற்றுக்கணக்கான வீடுகள், கிணறுகள், விவசாய பம்புசெட்டுகள், கோவில்கள், ஏரிகள், ஆயிரக்கணக்கான மரங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தங்கள் கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்கக்கூடாது என்று மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் காக்கவாக்கம், தொளவேடு கிராமங்களில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டத்திற்கு எல்லாபுரம் ஒன்றியச்செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறை மாநிலச்செயலாளர் கிரிதரன் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். தொளவேடு கிராமத்தில் கிராம சபை கூட்டம் தொடங்கியபோது இரவு ஆகிவிட்டது. அப்போது காக்கவாக்கம், தொளவேடு கிராம பொது மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்திருந்தனர். கூட்டத்தில் பொதுமக்கள் பேசியதாவது:-

நாங்கள் தொன்றுதொட்டு இப்பகுதியில் வசித்து வருகிறோம். விவசாய நிலங்கள் எங்கள் வாழ்வாதாரமாக உள்ளது. 6 வழிச்சாலை அமைத்தால் எங்களது உயிரினும் மேலான விவசாயத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்்படும். சாலை அமைக்க நிலம் கொடுத்தால் ஏக்கருக்கு ரூ. 3 லட்சம் வழங்குவதாக அரசு கூறி வருகிறது. ஆனால் ஏக்கர் ரூ.50 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை விலை போகிறது. மேலும் எங்கள் கிராமங்களின் எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆற்று ஓரத்தில் 6 வழிச்சாலை அமைத்தால் யாருக்கும் எந்தவித நஷ்டமும் ஏற்பட போவதில்லை.

அதை விட்டுவிட்டு கிராமங்கள் வழியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது மக்கள் விரோதப்போக்கை காட்டுகிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். உயிரை கொடுத்தாவது எங்கள் விளைநிலங்களை காப்போம். 6 வழிச்சாலைக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும். இதற்கு நீங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் பேசினர்.

இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு உதவ தி.மு.க. தயாராக இருப்பதாக கிரிதரன் உறுதி அளித்தார். பின்னர் கிராம பொது மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story