தமிழகத்தில் 550 ‘நீட்’ தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


தமிழகத்தில் 550 ‘நீட்’ தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 7:23 PM GMT)

வரும் கல்வியாண்டு முதல் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 550 ‘நீட்‘ தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

நெல்லை,

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று காலை நெல்லை வந்தார். வண்ணார்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின் படி சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. அமைதி பூங்காவாகவும், மின்மிகை மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை வகிக்கிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டு ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 31 கோடி செலவில் புதிய தொழில்களுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. ‘நீட்‘ தேர்வுக்காக 16 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு 41 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் 4 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 10 கல்லூரிகளில் உணவு, தங்கும் வசதியுடன் 20 நாட்கள் முழு பயிற்சி அளிக்கப்படும். அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.

இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்ததால், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 2 லட்சத்து 81 ஆயிரம் சி.ஏ. படித்த ஆடிட்டர்கள் உள்ளனர். இதுபோதுமானதாக இல்லை. எனவே, பிளஸ்-2 தேர்வில் வணிகவியல் எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் கூடிய திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து இருக்கிறோம்.

ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் 8, 9, 10 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசை அணுகி இருக்கிறோம். பிளஸ்-2 வரை அனைத்து பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் புதிய வண்ண சீருடை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். ‘நீட்’ தேர்வை பொறுத்தவரையில், கடந்த ஆண்டை போல் இல்லாமல் இந்த ஆண்டு தமிழகத்தில் 550 ‘நீட்‘ தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வருகிற ஆண்டு முதல் ஒரு மாணவர்கூட வெளி மாநிலம் சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நெல்லையப்பர் கோவில் சென்றார். சுவாமி சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளுக்கு சென்று அவர் சாமி கும்பிட்டார்.

Next Story