பெங்களூருவில் விமானசாகச ஒத்திகையின்போது நடுவானில் 2 ராணுவ விமானங்கள் மோதி விபத்து விமானி பலி; 2 பேருக்கு தீவிர சிகிச்சை


பெங்களூருவில் விமானசாகச ஒத்திகையின்போது நடுவானில் 2 ராணுவ விமானங்கள் மோதி விபத்து விமானி பலி; 2 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 19 Feb 2019 11:30 PM GMT (Updated: 19 Feb 2019 9:33 PM GMT)

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று(புதன் கிழமை) தொடங்கி 24-ந் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடக்கிறது.

பெங்களூரு,

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று(புதன் கிழமை) தொடங்கி 24-ந் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடக்கிறது.
இதற்கான தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது. விமான கண்காட்சியையொட்டி ஆளில்லா விமானங்களுக்கான (டிரோன்) ஒலிம்பிக் போட்டிகளும், போர் விமானங்களின் சாகசகங்களும் நடக்கின்றன.

இதில் ‘ரபேல்’ போர் விமானங்களும் முதல் முறையாக கலந்து கொள்ள உள்ளன. இந்த நிலையில், சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் விமானங்கள் நேற்று முன்தினம் முதல் விமானசாகச ஒத்திகையில் ஈடுபட்டு வந்தன.

அதன்படி நேற்று காலையிலும் விமானசாகச ஒத்திகை நடைபெற்றது. அப்போது காலை சுமார் 11.55 மணிக்கு ஒத்திகையில் ஈடுபட்டு இருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 ‘சூர்யகிரண்’ விமானங்கள் 2 நடுவானில் எதிர்பாராதவிதமாக ஒன்றோடொன்று உரசி மோதிக்கொண்டன.

எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தால் அந்த 2 விமானங்களும் விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து வானில் இருந்தே தாறுமாறாக சுழன்றபடி தரையை நோக்கி வேகமாக வந்தன. அந்த விமானங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்குள்ள இஸ்ரோ காலனி பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கின. அதோடு தீப்பிடித்து எரிந்தன. இதனால் அந்த இடம் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

முன்னதாக, விமானங்கள் மோதிக்கொண்டதை அறிந்தவுடன் அதில் இருந்த 3 விமானிகளும் அவசர காலத்தில் பயன்படுத்தக்கூடிய பாராசூட் விசையை அழுத்தினர். உடனே விமானத்தில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்ட அவர்கள் ‘பாராசூட்’-ஐ பயன்படுத்தி கீழே குதித்தனர். இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த ஒரு விமானி பலியானார். 2 விமானிகள் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி அறிந்தவுடன் அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்புபடை வீரர்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் ஒரு தரப்பினர் படுகாயம் அடைந்த விமானிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கமாண்டோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் தீயணைப்பு துறையின் இன்னொரு தரப்பினர் விமானங்களில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் தீயில் விமானங்கள் எரிந்ததால் எலும்பு கூடாக காட்சியளித்தன.

விமானங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி நிலத்தில் விழுந்து தீப்பிடித்ததால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்தை கர்நாடக தீயணைப்பு துறை டி.ஜி.பி. எம்.என்.ரெட்டி, பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் மற்றும் விமானப்படை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து எலகங்கா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது நொறுங்கி கிடந்த விமானங்களின் பாகங்களை சேகரித்தனர்.

இதுதொடர்பாக தீயணைப்பு துறை டி.ஜி.பி. எம்.என்.ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘சூர்ய கிரண்’ விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டேன். இந்திய விமானப்படையை சேர்ந்த ஒரு விமானி துரதிர்ஷ்டவசமாக மரணம் அடைந்து உள்ளார். 2 விமானிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை. பொதுமக்கள் யாருக்கும் காயம் இல்லை. இஸ்ரோ காலனியில் எந்த வீடுகளும் சேதம் அடையவில்லை. விபத்தில் உருவான தீயை தீயணைப்பு துறையினர் முழுவதுமாக அணைத்துள்ளனர்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு விசாரணை நடத்த உள்ளார். பெங்களூருவில் உள்ள அவரிடம் இதுபற்றி கேட்டபோது, ‘சம்பவம் குறித்து அறிந்து உள்ளேன்’ என்றார். இதற்கிடையே, விபத்து குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட உள்ளது என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

இதுதவிர விமான விபத்தில் பொதுமக்கள் மற்றும் வீடுகள் ஏதேனும் சேதம் அடைந்துள்ளதா? என்பது குறித்தும் விமானப்படை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில் விங் கமாண்டர் ஷகீல் காந்தி என்பவர் இறந்ததும், விங் கமாண்டர் விஜய் ஷெல்கி, படை தலைவர் (ஸ்குவார்டன் லீடர்) டி.ஜே. சிங் ஆகியோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் விமானப்படை சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் விமானப்படை அதிகாரிகளும், போலீசாரும் எப்படி விபத்து நடந்தது, இந்த விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக அவர்கள் கருப்பு பெட்டிகளை கைப்பற்றி தடயஅறிவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளனர். இந்த சோதனையின் முடிவில் விமான விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும்.

ஏற்கனவே கடந்த 1-ந் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘மிரஜ் -2000’ என்ற வகையை சேர்ந்த போர் விமானம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பியபோது திடீரென்று கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இதில், விமானிகளான டேராடூனை சேர்ந்த சித்தார்த் நேகி(வயது 31), உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த சமீர் அப்ரோல்(33) ஆகியோர் உடல் கருகி இறந்தனர். தற்போது 2 விமானங்கள் மோதியதில் விமானி ஒருவர் இறந்தது குறிப்பிடத்தக்கது. இன்று சர்வதேச விமான கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நேற்று பெங்களூருவுக்கு வந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

விமான விபத்து சம்பவம் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் விபத்துக்கான காரணம் தெரியவரும்.

திட்டமிட்டபடி சர்வதேச விமான கண்காட்சி நாளை (அதாவது இன்று) பெங்களூருவில் தொடங்கும். இதில் ‘சூர்யகிரண்’ போர் விமானங்கள், சாகச நிகழ்ச்சியில் பங்கேற்காது. மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

பத்திரிகையாளர் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, அவர் மரணம் அடைந்த விமானிக்கு மவுன அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


Next Story