கமல்ஹாசனுடன் கூட்டணி வைப்பது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும் அமைச்சர் காமராஜ் பேட்டி


கமல்ஹாசனுடன் கூட்டணி வைப்பது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும் அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 20 Feb 2019 11:00 PM GMT (Updated: 20 Feb 2019 5:01 PM GMT)

கமல்ஹாசனுடன் கூட்டணி வைப்பது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும் என்று திருவாரூரில், அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நாளை(வெள்ளிக்கிழமை) திருவாரூர் வன்மீகபுரத்தில், அம்மா அரங்கில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 120 ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோபால் எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏ.ஏன்.ஆர். பன்னீர்செல்வம், பொன்.வாசுகிராமன், ஆர்.டி.மூர்த்தி, கலியபெருமாள், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–


முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 120 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் 10 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவில் மணமக்களுக்கு தங்கத்தாலி, பட்டுப்புடவை, வேட்டி உள்ளிட்ட 70 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.


அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி உருவாகியுள்ளது. இதனை தாண்டி தமிழகத்தில் வேறு கூட்டணி உருவாக வாய்ப்பில்லை. அ.தி.மு.கவை பொறுத்தவரை ஆட்சியையும், கட்சியையும் தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு நடத்தி வருகிறோம். அந்த வகையில் தற்போது அமைந்துள்ள கூட்டணியின் மூலம் தமிழகத்திற்கு நலம் பயக்கக்கூடிய திட்டங்களை கொண்டு வந்து சேர்ப்போம்.

தே.மு.தி.க. மற்றும் கமல்ஹாசனுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கூட்டணி குறித்து கட்சியின் தலைமை முடிவு எடுத்து அறிவிக்கும் என்றும், மேலும் சில கட்சிகளுடன் தொடர்ந்து தலைமை பேசி வருவதாகவும், கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை கட்சி தலைமை முடிவெடுத்து அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story