பெண் சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலை கண்டித்ததால் கணவனே கொன்று தூக்கில் தொங்க விட்டது அம்பலம்


பெண் சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலை கண்டித்ததால் கணவனே கொன்று தூக்கில் தொங்க விட்டது அம்பலம்
x
தினத்தந்தி 20 Feb 2019 10:15 PM GMT (Updated: 20 Feb 2019 6:53 PM GMT)

நாகூர் அருகே பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளி, மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

நாகூர்,

நாகை மாவட்டம் நாகூர் அருகே திருப்பயத்தாங்குடி பி.எஸ்.ஆர். காலனி தெருவை சேர்ந்தவர் பரசுராமன்(வயது 40). தொழிலாளி. இவருடைய மனைவி அனுராதா(30). இவர்களுக்கு விக்னேஷ் (14), ஆகாஷ்(7) என்ற 2 மகன்கள் உள்ளனர். பரசுராமனுக்கு போதுமான வருமானம் இல்லாததால் பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் அனுராதா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அனுராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் அனுராதா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து பரசுராமனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது மனைவி அனுராதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை தூக்கில் தொங்க விட்டதும், பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடியதை பரசுராமன் ஒப்புக்கொண்டார்.

பரசுராமனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை மனைவி அனுராதா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பரசுராமன், அனுராதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளார்.மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

இதை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பரசுராமனை போலீசார் கைது செய்தனர்.

பெண் சாவில் திடீர் திருப்பமாக அவரது கணவரே கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story