ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்


ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 20 Feb 2019 11:00 PM GMT (Updated: 20 Feb 2019 9:27 PM GMT)

ஜெயலலிதா பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவட்டார்,

குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் சாமியார் மடத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் தலைமை தாங்கினார்.

இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்ட அவை தலைவர் சிவகுற்றாலம், இணை செயலாளர் மேரி கமலபாய், துணை செயலாளர் சத்யாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், நாஞ்சில் வின்சென்ட், தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சலாம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதை தொடர்ந்து கூட்டத்தில், காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் 44 பேரின் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. சார்பில் இரங்கல் தெரிவித்து கொள்வது, வருகிற 24-ந் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சிகளில் அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல், ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண் டும், புதிய தாலுகாவாக திருவட்டார், கிள்ளியூரையும், மாநகராட்சியாக நாகர்கோவிலையும் அறிவித்ததற்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க ஆணை பிறப்பித்த முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது.

மேலும், திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபமும், குமரி மாவட்டத்தில் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளைக்கு தேரூரில் மணிமண்டபமும் கட்ட ஆணை பிறப்பித்தற்கும் தமிழக முதல்-அமைச்சருக்கும், துணை முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story