திணறும் மெகா கூட்டணி


திணறும் மெகா கூட்டணி
x
தினத்தந்தி 20 Feb 2019 10:31 PM GMT (Updated: 20 Feb 2019 10:31 PM GMT)

மோடிக்கு எதிராக நாடு முழுவதும் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்தது.

மோடிக்கு எதிராக நாடு முழுவதும் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்தது.

மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் முயற்சிக்கு தோல்வியே மிஞ்சியது. 80 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் பரம எதிரி கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்து காங்கிரசை தனித்து விட்டது.

இதேபோல நாடாளுமன்ற தேர்தலில் 2-வது பெரிய மாநிலமான மராட்டியத்திலும் மெகா கூட்டணி கோஷத்தை காங்கிரஸ் மற்றும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பல மாதங்களுக்கு முன்பே முழங்கியது. அதாவது வாக்கு வங்கிகள் சிதறுவதை தடுக்க சிறிய கட்சிகள் அனைத்தையும் தங்களது கூட்டணிக்கு கொண்டு வந்து பா.ஜனதா, சிவசேனாவை தோற்கடிக்க வேண்டும் என்று வியூகம் வகுக்கப்பட்டது.

அம்–பேத்–க–ரின் பேரன் கட்சி

ஆட்சியில் பங்கு, அரசியலில் விரோதம் என்ற கொள்கையில் செயல்பட்டு வந்த சிவசேனா எதிர்பாராத விதமாக கடந்த திங்கட்கிழமை பா.ஜனதாவுடன் கூட்டணியை இறுதி செய்து விட்டது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் மாதக்கணக்கில் மெகா கூட்டணி என்று சொல்லப்படுகிறதே தவிர, இன்னும் அதற்கான இறுதி வடிவம் கிடைக்கவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் சிதறுவதை தடுக்க சட்டமேதை அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கரின் பாரிப் பகுஜன் மகாசங் கட்சியை மெகா கூட்டணிக்குள் கொண்டு வர எடுத்த முயற்சிக்கு இன்னும் பலன் கிட்டவில்லை.

ராஜ்–தாக்–கரே

கடந்த தடவை பா.ஜனதா கூட்டணியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட சுவாபிமானி சேத்காரி சங்காதானா தலைவர் ராஜூ ஷெட்டியை தங்கள் வசம் இழுத்ததில் மெகா கூட்டணி வெற்றி பெற்றது. விவசாய தலைவராக கருதப்படும் அவர் கூட்டணிக்கு வந்ததால் விவசாயிகள் ஓட்டு ஓரளவு கிடைக்கும் என்று காங்கிரஸ் கருதியது. ஆனால் அந்த கட்சிக்கும் இன்னும் தொகுதி பங்கீடு செய்யப்படவில்லை.

ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவை மெகா கூட்டணியில் இழுக்க தேசியவாத காங்கிரஸ் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியது. அவரை கூட்டணியில் சேர்த்தால் வட இந்தியர்களின் வாக்கு கிடைக்காதோ என்ற அச்சத்தில் காங்கிரஸ் பதறி போய் உள்ளது. இதனால் ராஜ்தாக்கரேயை கூட்டணியில் சேர்ப்பதிலும் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

ராஜ்தாக்கரேயை மெகா கூட்டணியில் சேர்த்தால் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் அபு ஆஸ்மி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ராஜ்தாக்கரேயின் வட இந்தியர் எதிர்ப்பு கொள்கை குறித்து மக்களிடம் பிரசாரம் செய்வோம் என்றும் தெரிவித்து இருக்கிறார். இது மெகா கூட்டணி கனவு காணும் காஙகிரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் தொகுதி பங்கீடு செய்யப்படவில்லை.

திண–று–கிறது

இதனால் மெகா கூட்டணி மராட்டியத்திலும் திணறுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் தலா 20 தொகுதிகளில் சரிசமமாக போட்டியிட்டு, மற்ற 8 தொகுதிகளை சிறிய கட்சிகளுக்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சில தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையே வருகிற 1-ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மராட்டியத்தில் பிரசாரத்தை தொடங்க உள்ளார். அதற்குள் மெகா கூட்டணி இறுதி வடிவம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story