கோயம்பேடு மார்க்கெட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டவர் விபசார அழகி போதையில் கொன்றவருக்கு வலைவீச்சு


கோயம்பேடு மார்க்கெட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டவர் விபசார அழகி போதையில் கொன்றவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Feb 2019 9:45 PM GMT (Updated: 21 Feb 2019 8:09 PM GMT)

கோயம்பேடு மார்க்கெட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டவர் மெரினாவை சேர்ந்த விபசார அழகி என்பது தெரியவந்துள்ளது.

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையின் முன்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கோயம்பேடு போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது குறித்தும் விசாரணை செய்தனர்.

விசாரணையில் அந்த பெண்ணுடன் வந்த நபர் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு அந்த பெண்ணை கழுத்தை அறுத்து அவர் கொலை செய்தது தெரியவந்தது.

அடையாளம் தெரிந்தது

கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் படத்தை வைத்து தொடர்ந்து விசாரித்ததில், கொலை செய்யப்பட்டவர் சென்னை மெரினாவை சேர்ந்த அம்மு என்கிற தேவி என்பதும், அவர் பாலியல் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக அவர் மீது அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவருக்கு வீடு இல்லை. கிடைக்கும் இடத்தில் தங்கி கொள்வார். இந்தநிலையில் சம்பவத்தன்று ஒரு ஆணுடன் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். கடைக்கு சென்று பிரியாணி வாங்கி வந்து சாப்பிடும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில், போதையில் அம்முவை கொலை செய்து விட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story