விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு


விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 21 Feb 2019 10:30 PM GMT (Updated: 21 Feb 2019 9:48 PM GMT)

விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விருத்தாசலம்,


விருத்தாசலத்தில் உள்ள குப்பநத்தம் புறவழிச்சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் விற்பனையாளராக ரமேஷ் என்பவரும், மேற்பார்வையாளராக ஆறுமுகம் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கடையில் வியாபாரம் முடிந்ததும், ரமேசும், ஆறுமுகமும் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை இருவரும் வழக்கம் போல டாஸ்மாக் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் கடைக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது கடையில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை காணவில்லை. இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, திருட்டு சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று முன்தினம் இரவு ரமேசும், ஆறுமுகமும் கடையை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடையின் பின்பக்க சுவரில் ஓட்டை போட முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் சுவரில் ஓட்டை போட முடியாததால், முன்பக்கமுள்ள கதவு பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள் கடையில் இருந்த மதுபாட்டில்களை திருடிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இதற்கிடையே விழுப்புரத்தில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் டாஸ்மாக் கடையில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ஆறுமுகம் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் மதுபாட்டில்களை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story