சேலத்தில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்தது ஏன்? போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்


சேலத்தில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்தது ஏன்? போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 22 Feb 2019 10:45 PM GMT (Updated: 22 Feb 2019 4:39 PM GMT)

சேலத்தில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்தது ஏன்? என்று போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கன்னங்குறிச்சி, 

சேலம் சின்னதிருப்பதி காந்திநகரை சேர்ந்தவர் காளியப்பன்(வயது 58), கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருடைய 2–வது மனைவி சாந்தா(52). கூலி வேலைக்கு சென்று வரும் இவர் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாகவும் இருந்தார். இந்தநிலையில் கடந்த 19–ந் தேதி காளியப்பனுக்கும், சாந்தாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அன்றைய தினம் நள்ளிரவு காளியப்பன் தனது மனைவியை சம்மட்டியால் அடித்து கொலை செய்தார். இதையடுத்து அவர் தனது சொந்த ஊரான சங்ககிரிக்கு சென்று அங்குள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மகளிர் சுய உதவிக்குழு தலைவி சாந்தா கொலை குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–

கூலி வேலைக்கு சென்று வரும் சாந்தா கணவருக்கு தெரியாமல் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காளிப்பனுக்கும் தெரியவந்ததும் அவர், தனது மனைவியிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி வந்தார். ஆனால் அவர் இதை கேட்காமல் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்தார். இதனால் அவர் மீது கோபத்தில் இருந்தார்.

இதற்கிடையில் சாந்தா மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருப்பதால் பல்வேறு இடங்களுக்கு அடிக்கடி சென்று வந்தார். இதுவும் காளியப்பனுக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த காளியப்பன் சம்பவத்தன்று அவரை சம்மட்டியால் அடித்து கொலை செய்தார். இதையடுத்து அவர் சொந்த ஊருக்கு சென்று தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story