எட்டயபுரம் அருகே லாரிகள் மோதல் நெல்லை டிரைவர் பரிதாப சாவு


எட்டயபுரம் அருகே லாரிகள் மோதல் நெல்லை டிரைவர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 22 Feb 2019 10:45 PM GMT (Updated: 22 Feb 2019 5:42 PM GMT)

எட்டயபுரம் அருகே லாரிகள் மோதிய விபத்தில் நெல்லை டிரைவர் பரிதாபமாக பலியானார்.

எட்டயபுரம்,

நெல்லை மாவட்டம் மானூரைச் சேர்ந்தவர் மோகன் (வயது 52). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவில் தனது லாரியில் மதுரையில் இருந்து மூலிகைச் செடிகளை ஏற்றிக்கொண்டு, தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். நேற்று அதிகாலையில் எட்டயபுரம் அருகே கோடாங்கிப்பட்டி பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு லாரி எதிர்பாராதவிதமாக அந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் அந்த லாரி நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. அப்போது அந்த லாரியில் இருந்த டிரைவர் மோகன் வெளியே தூக்கி வீசப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய லாரியின் முன்பகுதி சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாசார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த மோகனின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மற்றொரு லாரி டிரைவரான மதுரை மாவட்டம் கன்னியம்பட்டியைச் சேர்ந்த மாயாண்டி மகன் பிரகாசத்தை (31) கைது செய்தனர். இவர் மதுரையில் இருந்து தனது லாரியில் காய்கறி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

Next Story