கொசூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 வாலிபர்கள் பலி


கொசூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 24 Feb 2019 10:45 PM GMT (Updated: 24 Feb 2019 9:40 PM GMT)

கொசூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராசு. இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 30). இவர் நேற்று இரவு கொசூர் கிராமத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தோகைமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே தோகைமலை அருகே உள்ள சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெய்சங்கர் (25), மற்றொரு மோட்டார் சைக்கிளில் தோகைமலையில் இருந்து சுக்காம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.

இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் தோகைமலை-பாளையம் சாலையில் கொசூர் அருகே உள்ள நாதிப்பட்டி களத்துவீடு என்ற இடத்தில் வந்தபோது, எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன், ஜெய்சங்கர் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

வழக்கு

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 வாலிபர்களின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story