கோவை அருகே பரிதாபம், தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை


கோவை அருகே பரிதாபம், தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Feb 2019 10:30 PM GMT (Updated: 26 Feb 2019 7:22 PM GMT)

கோவை அருகே ஸ்ரீரங்கநாதர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சரவணம்பட்டி,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குளப்பாடியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவர் சென்னையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் குணால் (வயது 18). இவர் கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகில் உள்ள ஸ்ரீரங்கநாதர் என்ஜினீயரிங் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் அன்ட் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குணால் விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் லுங்கியால் தூக்குப்போட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு சக மாணவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள், குணாலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குணால் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த தகவலின்பேரில் கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் கல்லூரிக்கு சென்று குணாலின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து குணாலின் நண்பர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரணை செய்தனர். கல்லூரியில் ஏதேனும் பிரச்சினையா? காதல் விவகாரமா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

மேலும் குணாலின் செல்போனை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த குணாலின் உடலை பார்த்து அவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குணாலின் உடல் உறவினர் களிடம் ஒப்படைக்கப் பட்டது. 

Next Story