எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு: அடங்க மறுத்த காளைகள்; அடக்க துடித்த காளையர்கள் - 6 வீரர்கள் காயம்


எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு: அடங்க மறுத்த காளைகள்; அடக்க துடித்த காளையர்கள் - 6 வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 26 Feb 2019 10:30 PM GMT (Updated: 26 Feb 2019 9:22 PM GMT)

எருமப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 6 வீரர்கள் காயம் அடைந்தனர்.

எருமப்பட்டி,

நாமக்கல் அருகே உள்ள எருமப்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 242 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் அடங்க மறுத்த காளைகளை, காளையர்கள் அடக்க துடித்தனர். மாடுகள் முட்டி தள்ளியதில் 6 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நேற்று நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அனைத்து காளைகளையும் கால்நடை பராமரிப்புத்துறையினர் பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் அனைவரும் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார் தலைமையில் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து கோவில் மாடு வாடிவாசல் வழியாக விடப்பட்டது. பின்னர் காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து விடப்பட்டன. அவை தங்களை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களை தூக்கி வீசும் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. அடங்க மறுத்த காளைகளை அடக்க துடித்து சாதித்த காளையர்களுக்கு மின்விசிறி, கட்டில்கள், மிக்சி, வேட்டி-சட்டை, சில்வர் பாத்திரங்கள், வெள்ளிக்காசு மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோல் ஜல்லிக்கட்டில் அடக்க முடியாத மாடுகளுக்கும், அவற்றின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.இதில் நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம், போடிநாயக்கன்பட்டி, சாலபாளையம், எருமப்பட்டி பகுதியை சேர்ந்த காளைகள் மட்டுமின்றி திருச்சி, தம்மம்பட்டி மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மொத்தம் 242 காளைகள் சீறிப்பாய்ந்தன. இவற்றை அடக்க எருமப்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 130 மாடுபிடி வீரர்கள் மைதானத்தில் இருந்தனர். இவர்கள் சுழற்சி முறையில் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கேயே மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டி காயம் அடைந்த மாடுபிடி வீரர்கள் திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் பிரகாஷ் (வயது25), புதுச்சத்திரம் யுவராஜ் (30), அலங்காநத்தம் பிரபாகரன் (38), பொட்டிரெட்டிப்பட்டி மனோகரன் (42), பவித்திரம் ஆனந்தன் (40) ஆகிய 5 பேருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் எருமப்பட்டியை சேர்ந்த செல்வகுமார் (30) படுகாயம் அடைந்தார். அவரை மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

களை கட்டிய இந்த ஜல்லிக்கட்டை காண எருமப்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்தும், திருச்சி மாவட்டத்தில் இருந்தும் திரளான பொதுமக்கள் எருமப்பட்டியில் கூடி இருந்தனர்.

இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இதில் இலங்கை மந்திரி செந்தில் தொண்டைமான், சேந்தமங்கலம் தாசில்தார் பிரகாசம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காலை 8.45 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு மதியம் 1.45 மணி அளவில் முடிந்தது. இருப்பினும் போதிய நேரம் இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட காளைகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் காளைகளின் உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.




Next Story