வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் மேலும் 2 நாட்கள் நடக்கிறது


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் மேலும் 2 நாட்கள் நடக்கிறது
x
தினத்தந்தி 28 Feb 2019 9:54 PM GMT (Updated: 28 Feb 2019 9:54 PM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோருக்காக மேலும் 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

புதுச்சேரி,

புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த 23 மற்றும் 24-ந்தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த தேதிகளில் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் இதற்கான பணிகளை மேற்கொள்வார்கள். அப்போது வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் இடம்பெற்று இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலும் தங்களின் பெயர் தற்போதைய வாக்காளர் பட்டியலில் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.

வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய விரும்புவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இருப்பிட, வயது சான்றிதழ்கள், பெற்றோரின் வாக்காளர் அட்டை நகல் ஆகியவற்றுடன் தங்களது இருப்பிடம் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story