பிளஸ்-2 தேர்வு தொடக்கம்: அரியலூர் மாவட்டத்தில் 7,910 மாணவர்கள் எழுதினர்


பிளஸ்-2 தேர்வு தொடக்கம்: அரியலூர் மாவட்டத்தில் 7,910 மாணவர்கள் எழுதினர்
x
தினத்தந்தி 1 March 2019 11:30 PM GMT (Updated: 1 March 2019 10:00 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 7,910 மாணவ- மாணவிகள் எழுதினர்.

அரியலூர்,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 77 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பிளஸ்-2 பயிலும் மாணவ- மாணவிகளுக்கு நேற்று 30 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இதையொட்டி மாணவ- மாணவிகள் காலை 8.30 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறையினை ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் 9.30 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனையை தொடர்ந்து தேர்வின் போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்து கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து எடுத்துரைக்கப்பட் டது. தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாணவ- மாணவிகள் தேர்வறைக்கு செல்வதற்கு முன் பாடங்களை கற்பித்த ஆசிரியர்களிடம் வாழ்த்து பெற்றனர். அப்போது ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளிடம் கைக்குலுக்கி வாழ்த்து கூறியும், ஆசிர்வாதம் வழங்கியும் தேர்வறைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் 9.45 மணியளவில் தேர்வறைக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். சரியாக 10 மணியளவில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடைத்தாள் வழங்கியதும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பினர். 10.15 மணியளவில் மணிசத்தம் ஒலித்ததும் தேர்வினை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர்.

அரியலூர் மாவட்டத்தில் 3,445 மாணவர்களும், 4,465 மாணவிகளும் என 7,910 பேர் பிளஸ்-2 தமிழ் தேர்வினை எழுதினர். 662 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டிருந்தது.

அரியலூர் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக 52 தலைமை ஆசிரியர்களும், 52 துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். அரியலூர், உடையார்பாளையம் கல்வி மாவட்ட தேர்வு மையங்களுக்கு 9 வழித்தடங்களில் வினாத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல 9 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக 560 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள்-வினாத்தாளை மாற்றி எழுதுதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க 100 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை சுற்றி சுற்றி வந்து கண்காணித்தனர். அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் பிளஸ்-2 தமிழ் தேர்வினை எழுதிய மாணவ- மாணவிகளை கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விடைத்தாள்-வினாத்தாள் வழங்குவதில் குளறுபடி ஏதும் ஏற்பட்டிருக்கிறதா? தேர்வறையில் செல்போன் ஏதும் பயன்பாட்டில் இருக்கிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்துக்கும் 100 மதிப்பெண்கள் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி 12.45 மணிக்கு முடிவடைந்தது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத தனியாக ஆசிரிய- ஆசிரியைகள் சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுதி கொடுத்தனர். அவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. தமிழ்பாட தேர்வு என்பதால் பெரும்பாலான மாணவர்கள் திருப்திகரமாக எழுதி மகிழ்ச்சியுடனேயே வெளியே வந்தனர். நேற்று நடந்த பிளஸ்-2 தமிழ்பாட தேர்வில் யாரும் காப்பி அடிக்கவில்லை. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாணவ- மாணவிகள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு தேர்வெழுத ஏதுவாக போதிய பஸ் வசதியும், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தேர்வுகள் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் உள்பட போதிய போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆங்கிலம் தேர்வு நடைபெற இருக்கிறது. பிளஸ்-2 தேர்வு வருகிற 19-ந் தேதியுடன் முடிவடைகிறது.


Next Story