சாலை விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி சாவு; பொதுமக்கள் மறியல்


சாலை விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி சாவு; பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 2 March 2019 10:45 PM GMT (Updated: 2 March 2019 4:57 PM GMT)

செய்யாறு அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். டாக்டர்களை கண்டித்து மருத்துவமனை எதிரில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்யாறு, 

செய்யாறு தாலுகா காழியூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் செய்யாறு பஸ் நிலையத்திலிருந்து அரசூர் கிராமத்திற்கு பயணிகளை ஏற்றிச்சென்றார். அங்கு அவர்களை இறக்கி விட்டபின் செய்யாறுக்கு ஆட்டோவை ஓட்டி வந்து கொண்டிருந்தார். வந்தவாசி-செய்யாறு சாலையில் அரசூர் கூட்ரோட்டில் வந்தபோது அங்கு சாலையோரம் இருந்த மண்ணில் சிக்கி ஆட்டோ கவிழ்ந்தது.

படுகாயம் அடைந்த டிரைவர் பன்னீர்செல்வம் சுய நினைவை இழந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் இறந்து விட்டார்.

உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததே பன்னீர்செல்வத்தின் சாவுக்கு காரணம் என்று கூறி அவரது உறவினர்களும், பொதுமக்களும் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையின் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள், செய்யாறு போலீஸ் துணை சூப்பிரண்டு பி.தங்கராமன் (பொறுப்பு) ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக அரசு நிவராணம் வழங்க வேண்டும், பன்னீர்செல்வத்தை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட டாக்டர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த செய்யாறு உதவிக்கலெக்டர் அன்னம்மாள், சாலை விபத்து நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை பாதிக்கப்பட்ட பன்னீர்செல்வம் மனைவி சுபாவிடம் வழங்கினார். மற்ற கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று அவர் கூறினார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மருத்துவ மனையில் பரபரப்பு ஏற்பட்டதால் புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமலும், உள்நோயாளிகள் சிகிச்சை அளிக்கமால் காலதாமதம் ஏற்பட்டு சிரமமடைந்தனர்.

Next Story