படவீடு பேரூராட்சியில் 62 பேருக்கு முதியோர் உதவித்தொகை அமைச்சர் தங்கமணி வழங்கினார்


படவீடு பேரூராட்சியில் 62 பேருக்கு முதியோர் உதவித்தொகை அமைச்சர் தங்கமணி வழங்கினார்
x
தினத்தந்தி 2 March 2019 9:30 PM GMT (Updated: 2 March 2019 7:49 PM GMT)

படவீடு பேரூராட்சியில் 62 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் உத்தரவை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

குமாரபாளையம், 

நாமக்கல் மாவட்டம், படவீடு பேரூராட்சியில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி, பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். ஈரோடு எம்.பி. செல்வக்குமார சின்னையன் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு படவீடு பேரூராட்சி பகுதிகளில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பிறகு 15 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனங்களையும், வருவாய்த்துறை சார்பில் 62 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:-

கடந்த ஒரு ஆண்டு காலத்தில் படவீடு பேரூராட்சியில் ரூ.7 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் தனிகுடிநீர் திட்டத்துக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் படவீடு பேரூராட்சிக்கு மட்டும் ரூ.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் படவீடு பேரூராட்சி முன்னாள் தலைவர் பி.ஏ.ஜெகன்நாதன், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) என்.எம்.முருகன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மு.துரை, செயல் அலுவலர் மு.ஆறுமுகம் உள்பட அரசுத்துறை அலுவலர், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story