வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவ– மாணவிகளுக்கு காலணிகளுக்கு பதில் ‘ஷூ’ வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு


வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவ– மாணவிகளுக்கு காலணிகளுக்கு பதில் ‘ஷூ’ வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 3 March 2019 11:15 PM GMT (Updated: 3 March 2019 6:51 PM GMT)

வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிக்கூட மாணவ– மாணவிகளுக்கு காலணிக்கு பதில் ‘ஷூ’ வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன், அந்தியூரில் நடந்த விழாவில் பேசினார்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அ.தி.மு.க. அரசின் 2–ம் ஆண்டு சாதனை விழா, முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அந்தியூர் சட்டமன்ற தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்ட இ.எம்.ஆர்.ராஜாவுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.

விழாவுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்மணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது கூறியதாவது:–

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூட மாணவ– மாணவிகளுக்கு தனியார் பள்ளிக்கூட மாணவ– மாணவிகள் போன்று சீருடைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கல்வித்தரம் சிறப்பாக உள்ளது. எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிக்கூட மாணவ– மாணவிகளுக்கு காலணிகளுக்கு பதில் ‘ஷூ’ வழங்கப்படும். அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இண்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும்.

அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் ஸ்டேடியமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பொம்மன்நாயக்கன்பாளையம் மேல்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும். அத்தாணி பள்ளிக்கூடத்துக்கு 8 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அந்தியூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மணியாச்சி பள்ளம் ஓடைநீரை அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு கொண்டு வரவும், மேட்டூர் அணையின் உபரிநீரை அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு கொண்டுவரவும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் பி.தங்கமணி கூறுகையில், ‘எதிரிகளும், துரோகிகளும் சேர்ந்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சி இன்று முடியும், நாளை முடியும் என கூறிக்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாடம் புகட்ட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி செய்து வருகிறார். பா.ம.க. உள்பட பல கட்சிகள் நம்முடன் சேர்ந்து பணியாற்ற உள்ளன. நமது கூட்டணி வெற்றி கூட்டணி,’ என்றார்.

அமைச்சர் கே.சி.கருப்பனன் பேசுகையில், ‘வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறியதுபோல் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும். அப்போது அ.தி.மு.க. மட்டுமே இருக்கும். தி.மு.க. மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும்’ என்றார்.

விழாவில் அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்து சால்வை அணிவிக்கப்பட்டது.

இதில் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலுச்சாமி, லிங்கசாமி, மாவட்ட தொழில்நுட்ப இணை செயலாளர் வி.குருராஜ், மாணவர் அணி தலைவர் சண்முகானந்தம், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் கிருஷ்ணன், மோகன், வெங்கடாசலம், வெற்றிவேல் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அந்தியூர் நகர செயலாளர் டி.எஸ்.மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.


Next Story