திருவாரூர் மாவட்டத்தில் 94 ஆயிரம் எக்டேரில் உளுந்து, பயறு சாகுபடி பூச்சி தாக்குதலால் விவசாயிகள் கவலை


திருவாரூர் மாவட்டத்தில் 94 ஆயிரம் எக்டேரில் உளுந்து, பயறு சாகுபடி பூச்சி தாக்குதலால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 3 March 2019 10:30 PM GMT (Updated: 3 March 2019 7:13 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் 94 ஆயிரம் எக்டேரில் உளுந்து, பயறு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் தஞ்சை, நாகை மாவட்டங்களை விட நெல் உற்பத்தியில் திருவாரூர் மாவட்டம் முதன்மை இடத்தை வகித்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 400 எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடந்தது.

இதனை தொடர்ந்து 1 லட்சத்து 49 ஆயிரத்து 500 எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்று, அறுவடை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

தற்போது உளுந்து, பயறு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 94 ஆயிரம் எக்டேர் பரப்பில் உளுந்து, பயறு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 56 ஆயிரம் 500 எக்டேரில் உளுந்து சாகுபடியும், 37 ஆயிரம் 500 எக்டேரில் பயறு சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உளுந்து, பயறு சாகுபடியில் அதிகமாக பூச்சி தாக்குதல் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து இலவங்கார்குடியை சேர்ந்த விவசாயி ராஜஇளங்கோ கூறுகையில், பயறு முளைத்து வரும் நிலையில் பூச்சிகள் இலைகளையும், பூவையும் தாக்கி வருவதால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பூச்சி மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.

எனவே வேளாண்மை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Next Story