கல்பாளையத்தான்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்


கல்பாளையத்தான்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்
x
தினத்தந்தி 3 March 2019 11:00 PM GMT (Updated: 3 March 2019 9:08 PM GMT)

மணப்பாறை அருகே கல்பாளையத்தான்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.

மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த கல்பாளையத்தான்பட்டியில், புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், 782 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, 293 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சர்மு, ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப் பட்டது. அதைத் தொடர்ந்த உள்ளூர் காளைகளும், தொடர்ச்சியாக திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தேனி, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த காளைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் சில காளைகள் அடக்க வந்த வீரர்களை விரட்டியடித்தன. பல காளைகளை வீரர்கள் அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களால் அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ உள்பட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

காளைகள் முட்டியதில் 3 பார்வையாளர்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில், ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையிலான வருவாய் துறையினரும், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் தலைமையிலான போலீசாரும் ஜல்லிக்கட்டு போட்டியை கண்காணித்தனர். நேற்று வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தபோதும், ஏராளமான மக்கள் இறுதிவரை ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். 

Next Story