பரேல் முனையத்தில் இருந்து மின்சார ரெயில் சேவை மந்திரி பியூஸ்கோயல் தொடங்கி வைத்தார்


பரேல் முனையத்தில் இருந்து மின்சார ரெயில் சேவை மந்திரி பியூஸ்கோயல் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 March 2019 11:15 PM GMT (Updated: 3 March 2019 10:56 PM GMT)

பரேல் முனையத்தில் இருந்து மின்சார ரெயில்சேவையை ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் தொடங்கி வைத்தார்.

மும்பை,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள பரேல் ரெயில் நிலையத்தில் ரூ.51 கோடி செலவில் புதிய ரெயில் முனையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ரெயில் முனையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கான விழா மும்பை சி.எஸ்.எம்.டி.யில் நடந்தது.

பரேல் ரெயில் முனையத்தில் இருந்து ரெயில் சேவையை மந்திரி பியூஸ் கோயல் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பரேல் முனையத்தில் இருந்து டோம்பிவிலிக்கு முதல் மின்சார ரெயில் சேவை இயக்கப்பட்டது. அதில் பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்தனர். பரேல் ரெயில் முனையத்தில் இருந்து தினசரி தானே மற்றும் டோம்பிவிலிக்கு தலா 3 சேவைகளும், கல்யாணுக்கு 8 சேவைகளும், அம்பர்நாத் மற்றும் பத்லாப்பூருக்கு தலா ஒரு சேவையும் என மொத்தம் 16 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதன்படி தானேக்கு காலை 8.38 மணி, மாலை 4.10 மணி, இரவு 7.24 மணிக்கும், டோம்பிவிலிக்கு மதியம் 12.17 மணி, 1.40 மணி, மாலை 5.10 மணிக்கும், கல்யாணுக்கு காலை 10.44 மணி, 11.09 மணி, பிற்பகல் 2.57 மணி, 3.23 மணி, மாலை 5.35 மணி, இரவு 8.59 மணி, 9.39 மணி, 9.59 மணிக்கும், அம்பர்நாத்துக்கு இரவு 10.49 மணிக்கும், பத்லாப்பூருக்கு இரவு 11.15 மணிக்கும் இயக்கப்படுகிறது.

Next Story